★வேலன் என்னும் தோழன்★
*****************
*செங்கொடியே செங்கதிரே
செகம்புகழ் சிங்கார வேலனர்
செய்திட்ட சிறப்புகளை
செப்பிட வந்தேன் கேளீர்
*மாசுஅறு வீரனை
மாசறு செம்பொன்னை
ஆசறுசீர் விருத்தத்தில்- எம்மால்
அடக்கிட ஏலாது!
*எழுசீர் விருத்தங்களில்
எழுகதிர் வேலவனை
தொழுது அடியேன் - எடுத்
தெழுதவும் காணாது!
*எண்திக்கும் வென்று
எட்டவியலா அவர்பெருமை தம்மை
எண்சீர் அகவலிட ஆகாது
எனத் திக்கும் என்இந் நிலையில்..
*இந்தியப் பொதுவுடைமையின்
துவக்க விதையை
புதுக் கவிதையால்
புதுக்க விழைந்தேன்;
புதுக்க விளைந்தேன்!
*பதுக்கல் என்பது தனியுடைமை-
ஆனால்,
பாட்டாளிக் கெப்போது பொதுவுடைமை!?
செதுக்க வந்தது
சிங்கார வேலனெனும்
சிற்பியவரின் சிந்தனை - அதனை
அறுக்க வந்த வாள்வேல்கள் எத்தனை?
அவர் புகழைக்
கூறிட்ட குறுமதிதான் எத்தனை?
கூறிடுவேன் மனமே அவனை நினைந்தனை..
*மயிலை ஊர்தியாகக்
கொண்டவன் சிங்கார வேலன்;
அது கந்த புராணம்.
மயிலைஊர் தியாகத்தைக்
காண விளைந்தவன்
சிங்கார வேலன்;
இது கம்யூனிச புராணம்.
*நாலுவகையாம் வேதம்
நாலுவருணமாம் சாதி
பகுத்து வைத்து பாரதத்தில்
சடுகுடு ஆடியது சனாதன தர்மம்!
'வருண மழை பொதுவாம்
வாழ்வாதாரம் பாப்பானுக்கும்- அவனை
வாழவைக்கும் பாட்டாளிக்கும் அதுவாம்
ஆகவே, ஈண்டு
'வருணபேதம் தொலைப்போம்
வர்க்கபேதம் ஒழிப்போம்!
பகுத்தறிவு அரிவாள் கொண்டு் அவாளை
திருத்தத் தோற்றுவித்து வெல்ல வைத்தார்
சிங்கார வேலனார் சமதர்மம்!
*பரதனின் பகீரதப் பிரயத்தனம்
பரதகண்டமெனப் பல்லிளித்த
எச்சத்தில் சனித்தவர்கள்
எச் சத்தில் எம்தோழரை
பரதவர் எனப் பழித்தார்?
*பரதவர் அவரென ஏறிட்டும்
பாராதவர் அவர் ஆற்றிய அருந்தவம் அறியா தவறாயினர்
*பாட்டாளிப் புரட்சி குதிரை பூட்டி
'பகீர்'ரதம் ஓட்டிக் காட்டிடவே-அந்த
மீனவர் இந்திய விடிவெள்ளி -விண்
மீன்அவர் என உணர்ந்தார்;
உறைந்தார்
*இஃதென்ன விந்தை!
சிற்பி வேறு, ஓவியன் வேறு.
ஈது இலக்கணம். ஆயினும்
ஒருங்கிணைந் ததிப்படி..
ஆம்!
சோவியத்துப் புரட்சியை - நம்நெஞ்
சோவியத்துள் வரைந்த 'சிற்பி' அவர்.
உழைப்பாளி மார்க்கத்திற்கு
உப்பிட் டவர்!
*காவியத்தைப் படைக்கும்
காவி'யர்கள் பாவியரே என்பேன்.
சாவிதனை இகழ்ந்தார் செங்கொடியே!
வறுமைச் சாவு+இதனை இகழ்ந்தார்.
திறவுகோல் சாவிதனை பூட்டினர் எனக் கொள் அல்லனவேல்,
வேல்கொண்டு கொல்!
*அடடாவோ
அடாதென்பேன்..
அருங்கதிரே
இதனைப் பேண்..
*கரைபுரளும் காட்டாற்று வெள்ளத்தை
தீப்பந்தம் கொண்டு எரியத் துணியாதீர்!
அடிவான விடிவெள்ளி
விண்மீனவனின் வீரப்புகழ் ஒளியை
மண்மீதினில் உங்கள்
மகத்தான மெழுகுதிரிகள
மங்கிடச் செய்திடுமோ!
*கலங்கரை விளக்கமவன்
துலங்கிடும் செவ்வொளியை
துட்டரே உங்கள் - குறுங்
கலங்கள் கலங்கலைத் தெளிக்குமோ? தெளிவீர்!
*கம்யூனிச மார்க்கம் அழிக்க
கனவிலும் நினையாதீர்!- அட
இடக்கரடக்கல்களே- உங்கள்
கால்களை நனையாதீர்!
*இரட்சிப்போம் என்று நாளும்
இரட்டை வேடமிட்டோரை
புரட்சி விதைத்து
புலியாகி இரைகொண்டார் எம்வேலர்- இச்
செந்தோழர் கண்டு நடுங்கினர்
வெண்தோலர்
*ஆகாத பத்தியத்தை தன்திறத்தால்
முதலாளித்துவ முனைமுறித்து
எதிர்த்திட்டான் ஏகாதிபத்தியத்தை!
நோகாது நோன்பு கொண்டோரும்
நோக்க வைத்தான் சத்தியத்தை!
*பகுத்தறிவுப் பகலவன் பெரியார் -அப்
பெரியார் எதற்கும்
சரியார்; ஆரையும் அனுசரியார்- அத்
தகையாருக்கு சரி யார்?
தக்கவர் சிங்கார வேலனார்!
*கறுப்புச் சட்டைக்காரன்
சிகப்புச் சித்தாந்தியோடு
கரங்கள் இணைத்த
கண்ணியப் பொழுதுகள் அவை!
*'கர்மா'வென கதைபேசிய
கயமைப் புதர்களை
களைந்து தூய்மை
நிலமாக்கிய விழுதுகள் அவை!
ஆதலின்தானே,
அடங்கி தன்மானம் காக்கிறது
அகிலம் என்னும் அவை!
*'ஒத்துழையாமை' ஆன
ஒப்பிலா மையைத் தீட்டிய
சிங்கார வேலனார் களைந்தார்
வழக்குரைஞர் அங்கி!
அவ்வங்கி (அவ்+அங்கி)
மார்க்சீய 'மூலதனத்'தை
பொருள் ஈட்ட வைத்த
'முதல்'வங்கி!
*எச்சொல்
தொழிலாளர் நலம் பேசும் - நற்
சொல்லெனின், - அச்
சொல்லே லெனின்சொல் எனக்
கண்டார்; உரைத்தார்;
தொழிற்சங்கம் அமைத்தார்
*தமிழ்ச் சங்கம் கொண்டது மதுரை
தொழிற்சங்கம் கண்டது மயிலை
அச்சங்கம் வளர்த்தது இறையனார்; முருகவேள்
இச்சங்கம் படைத்தது இறையிலார்; சிங்கார வேல்
*உண்மை!
தமிழ்ச் சங்கம்
தன் இலக்கணத்தில்
புணர்ச்சி விதிகளோடு -இத்
தொழிற்சங்கம் எனுமோர் - விழிப்
புணர்ச்சி விதியையும் பொருத்தி
புனரமைத்துக் கொண்டது!
*மதிய உணவுத் திட்டமதை முதலில்
மண்டினி ஞாலத்திற்கு ஊட்டியது
சிங்கார வேலனார் என்னும்
பால்நிலாச் சோறு - அதை
மதியாதார் ஏற்க மறுத்து பின்னர்
மதித்தவர் வயிற்றினில் வார்த்த்தார் உபகாரமாய்
மூன்றுகனிச் சாறு
*இச்சகமதில் வேலனார் பெருமைகளை
அச்சகத்தில் எழுதி அமையாது
வஞ்சகத்தால் புதைத்தார்
நெஞ்சகம் இலாதோர்
*இத்தனை கொடியது
இருந்தும் வறுமை கொடியது
இருமை ஆகிய வர்க்கம் கொடியது என
இட்ட கொடியது (கொடி+அது)
பாட்டாளி படும் பாட்டைப் போக்க - அவன்
பலவித பலன்களை அடைய
பட்டொளி வீசி பாரெங்கும் பறக்குது!
தொட்ட இடமெலாம்
தோழர் புகழைப்
பேசிச் சிறக்குது!
*வர்க்கபேதம்
'வருணபேதம் நீங்கிடவே
வரமாய் வந்தவர் புகழ்
வாழிய வாழிய வாழியே
அன்புடன்,
கம்கோராஜா நாச்சிமுத்து